Monday, April 23, 2012

விடுமுறை விடப்போறாங்க ..

பள்ளி ஆண்டுத் தேர்வு முடிந்து விடுமுறை விடப்போறாங்க .. பயலுவளுக்கெல்லாம் ஒரே குஷி ! இந்த வாட்டி பாட்டி வீட்டுக்கு வேணாம், அத்த வீட்டுக்கு போலாம்பா, அங்க நெறைய மரம் இருக்கும் ஏரி இருக்கும் அதில நெறைய மீன் இருக்கும் அத்த அவங்க பாவடைய இடுப்பில கட்டிக்கிட்டு பலூன் போல மேதப்பங்க, அப்படியே என்னையும் முதுகுல தூக்கிகிட்டு ஏரியோட கொஞ்ச தூரம் போவாங்க, காலையில பாட்டி எதிர் வீட்டுல ஆப்பம் பால் வாங்கியாந்து தருவாங்க .. நானும் தம்பியும் நல்ல ஓடி பிடிச்சு வெளையாடுவோம் ! போலாம்பா ....போலாம்பா... என்று அப்பாவிடம் கெஞ்சிய காலமெல்லாம் மலையேறி போயிடுச்சிங்க...

அப்படியே அப்பா சரி என்று சொல்லிவிட்டால் போதும், அன்னக்கி ராத்திரி தூக்கமே வராது... ராத்திரியில எழுந்து எழுந்து அலாரத்தை பாத்துட்டு மறுபடியும் படுக்கிறது ...இப்படியே ராத்திரி பூரா நேரத்த முழுங்கிட்டு காலையில எல்லாருக்கும் முன்னாடியே எழுந்து குளிச்சிட்டு தயாராயிட்டு .. அப்பா அம்மா எப்போ கேளம்புவாங்க ன்னு குட்டி போட்ட பூனை போல அங்கேயும் இங்கேயும் ஓடி நடந்து அல்லாடுவாங்க ....

சரி எல்லாம் கெளம்பி அந்த காலையில மொத பேருந்த புடிச்சு போயி அப்பறம் இன்னொரு பேருந்த புடிச்சு, அந்த பேருந்து என்னடான்னா ஒரு நாளைக்கு மூணு முறை தான் வரும் போகும், அந்த டென்ஷன் எல்லாம் தாண்டி ஒரு வழியா கிராமத்துக்கு போனா அங்க பேருந்து நிக்கற இடத்திலேயே பாட்டி அத்த மாமா எல்லாம் ரெடியா நிப்பாங்க, பசங்க படிகட்டுல கடைசி படிக்காட்டுல கால வக்கிரத்துக்கு முன்னாடியே அத்த அப்படியே அலேக்க தூக்கிடுவாங்க அப்புறம்  அங்க இருந்து கெளம்பற வரைக்கும் ஒரு கொண்டாட்டந்தா...அவர்களோட அன்பு மழையில நனைஞ்சு ஜலதொசமே புடிச்சுக்கும்.

அந்த கிராமத்து காத்தும் மக்களோட அன்பும் அரவணைப்பும், புது புது முகங்களின் அறிமுகங்களும் அந்த பசங்களோட நம்ம பயலுவ அந்த வெயிலிலும் சுற்றி திரியும் போது நாம அவங்களிடம் கோவப்படுவதும் ..அது ஒரு புது அனுபவமா இருக்க்கும்.

பள்ளி நாட்களில் பெரும்பாலான நேரங்களை பள்ளியிலும் ஆசிரியர்களிடமும் கழித்துவிட்டு வீட்டிலேயே முழு நேரமும் இருப்பதை நினைத்து நினைத்து முதல் ஒரு வாரத்திற்கு ஒன்னரை மாத விடுமுறையை குதூகலமாக கொண்டாட செய்வார்கள். முழுக்க முழுக்க ஆசிரியர்களின் கட்டுப்பாட்டிலிருந்து விடுபட்டு பெற்றோர்களின் பிடியில், தான் நினைப்பதை, கேட்பதை (பெற்றோர்கள் வாங்கிதராவிட்டாலும்) கேட்டு மிகுந்த சந்தோசமாக சொந்த பந்தங்களின் பாச பிணைப்பில் திளைக்கிறார்கள் ...

ஆனால் இப்போதுள்ள மாணவர்களுக்கெல்லாம் இதெல்லாம்   பழங்கதைகளாகவும், எட்டாக்கனியாகவும் ஆகிவிட்டது. இன்று பெரும்பாலான மக்கள் கிராமங்களிலிருந்து பிழைப்புக்கு நகரத்தை நோக்கி புலம் பெயர்வது நமக்கெலாம் வருத்தமடைய செய்யும் செயலாக இருந்தாலும் விவசாயத்தை நம்பி அவர்களால் இருக்கமுடிவதில்லை.
குறைந்தது இந்தமாதிரி விடுமுறை நாட்களிலாவது தங்கள் கிராமங்களுக்கு அழைத்து சென்று அவர்களுக்கு கிராமத்தின் வாழ்க்கையை  தெரிய வைக்கலாம்.

ஆனால் இன்றைய பெற்றோர்கள் விடுமுறை விட்ட அடுத்த நாளே தங்களோட பசங்க ஏதாவது ஒரு வேலைக்கு செல்ல வேண்டும் அல்லது ஒரு தனிப்பயிற்சி வகுப்புகளில் சேர்ந்து தன்னோட மூளைய மேலும் வெளுக்க வேண்டும், இந்தமாதிரியான நோக்கமே இன்றைய பெரும்பாலான பெற்றோர்களிடம் காண கிடைக்கிறது. இதுல இன்னொரு கேவலமான செய்தி என்னான்னா தங்களோட பிள்ளைகள் ஒடனே கைநெறைய சம்பாதிக்கணும் அதுக்கு அவங்கள பணம் கொட்டும் எந்திரமாகவும், சுயநலவாதியாகவும், மனித நேய மற்ற மிருகமாகவும் மாற்ற அவர்களை விடுமுறை நாட்களிலும் ஓய்வின்றி தங்களோட தேவைகளை அவர்களின் மூலையில் திணிக்கிறார்கள்.

ஆண்டு விடுமுறை எதுக்கு விடறாங்க.... மாணவர்கள் தங்களுக்கு விடப்படும் இந்த விடுமுறையை பாட சுமைகளிலிருந்து விலகி வேறு நல்ல செயல்களுக்கு நேரத்தை செலவிட்டு தங்களை மனதளவிலும், உடலளவிலும் தயார் படுத்திக்கொள்ள வேண்டும். அத விட்டுட்டு மறுபடியும் அவங்களுக்கு ஓய்வே தராம அவங்களோட சந்தோசத்த கெடுக்கறது எந்த விதத்துல நியாயம்.

இதிலவேற ஒன்பதாம்பு, பதினொன்னாவது படிக்கிற பசங்ககுக்கு இன்னும் மோசம் ஆண்டு விடுமுர விட்ட வொடனே பத்தாவது பன்னிரெண்டாவது பாடத்த ஆரம்பிச்சுடுறாங்க... அப்போதான் அந்த பள்ளி நூறு சதவிகித தேர்ச்சி பெறுமாம். வீனப்போனவனுங்க... ஆண்டு முழுவதும் படித்த மாணவர்களுக்கு விடுமுறை என்பது அவர்களுக்கு ஆனந்தத்தை தருவது . அடுத்த வேலைக்கு அவர்களை தயார்படுத்த வுதவுகிறது.இந்த விடுமுறையை மாணவர்கள் மனதில் நல்ல எண்ணங்களை விதைத்து பெற்றோர்களுக்கும் பிள்ளைகளுக்கும் உள்ள உறவை மேலும் மேலும் வளர்த்து அவர்களை தங்களுடைய அன்பினால் நெறிப்படுத்த வேண்டும் அதை விடுத்து அவர்களை இயந்திரமாக மாற்ற வேண்டாம்.

மாணவர்களும் தங்களுடைய இந்த நேரத்தை தொலைக்காட்சி, சினிமா, போன்ற வற்றில் மூழ்கி விடாமல் தங்களுடைய திறமைகளை வளர்த்தெடுக்க முயலவேண்டும். ஒய்வு நேரங்களின் நூலகங்களுக்கு போகலாம், பாட புத்தகங்கள் தவிர்த்து வேறு செய்திகளை தேடி தேடி படித்து தெரிந்து கொள்ளாலாம். இது உங்களின் போது அறிவை வளர்க்க கொடுத்த வாய்ப்பாக எண்ணிகொள்ளலாம்.

பெற்றோர்கள் தங்களின் திறமைகளை கண்டறிந்து அவர்களை மேலும் மேலும் ஊக்க படுத்தவேண்டும்.

-யாகார்

Saturday, January 7, 2012

பத்து ரூபாய்க்கு வைத்தியம் பார்க்கும் கட்பீஸ் ஜவுளி வியாபாரி சங்க மருத்துவமனை





சென்னை: பசி வந்தால் பத்தும் பறந்து போகும் என்பார்கள், ஆனால் இப்போதெல்லாம் நோய் வந்தால் சேர்த்து வைத்த, சொத்து பத்தெல்லாம் பறந்து போய் விடுமோ என அஞ்சும் நிலை உருவாகியுள்ளது. அந்தளவிற்கு தனியார் மருத்துவமனைகளில் கட்டணம் பகல் கொள்ளையாக உள்ள நிலையில், தமிழகத்திலேயே முதன் முறையாக கட்பீஸ் ஜவுளி வியாபாரிகள் சங்கத்தின் சார்பில் நடத்தப்படும் மருத்துவமனை பொதுமக்களுக்கு பத்து ரூபாயில் நோய்க்கு தீர்வு தருகின்றனர்.
சென்னை தண்டையார்பேட்டை தாண்டவராயன் தெருவில் கடந்த 2010ல் சென்னை வண்ணாரப்பேட்டை கட்பீஸ் ஜவுளி வியாபாரிகள் சங்கத்தின் சார்பில் பியாரிலால் ஜெயினின் உதவியுடன் ஏழைகளுக்கு தொண்டு செய்ய வேண்டும் என்று எண்ணிய சகுந்தலா என்பவரின் பெயரில் தொடங்கப்பட்டது தான் சகுந்தலா தேவி மகப்பேறு மருத்துவமனை. இம் மருத்துவமனை ரூ. மூன்று கோடி செலவில் பலரின் நிதியுதவியுடன் தொடங்கப்பட்டது. பெண்களுக்கு மகப்பேறு சிகிச்சை அளிப்பதில் பகுதி மக்களின் முதல் தேர்வாக இம்மருத்துவமனை உள்ளது.
இங்கு பிள்ளை பேறு பெறும் பெண்களுக்கு அனைத்து வித பரிசோதனைகளுடன், தேவைப்படும் பட்சத்தில் அறுவை சிகிச்சை மூலமாகவும் மிக குறைந்த செலவில் மகப்பேறு சிகிச்சை அளிக்கின்றனர்.
இன்று தலைவலி மற்றும் காய்ச்சல் வந்தால் கூட, மருத்துவரை அணுகினால் குறைந்தபட்சம் மருத்துவருக்கு நூறு ரூபாய் அழ வேண்டியிருக்கும். ஆனால் இங்கு மருத்துவ பரிசோதனைக்கு வெறும் பத்து ரூபாய் மட்டுமே கட்டணமாக பெறுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதே போல், சுகப்பிரசவத்திற்கு ஆயிரம்ரூபாயாகவும், அறுவை சிகிச்சைக்கு ஆறாயிரத்து 500 ரூபாயும் கட்டணமாக பெறுகின்றனர். இந்த கட்டணங்கள் கூட, மருத்துவர்கள் மற்றும் மருத்துவ குழுவினரின் சம்பளத் தேவைக்காக தான் வாங்கப்படுகிறது என மருத்துவமனை செயலரும், கட்பீஸ் ஜவுளி வியாபாரிகள் சங்க உயர்மட்டக்குழு உறுப்பினருமான மாரிமுத்து கூறினார்.
மேலும் அவர் கூறியதாவது: மக்களுக்கு குறைந்த செலவில் சிகிச்சை அளிக்க வேண்டும் என்று எண்ணியே இம்மருத்துவமனை ஆரம்பிக்கப்பட்டது. ஆரம்பித்து ஓன்றரை ஆண்டாகி விட்டது. இதுவரை 827 பெண்களுக்கு சுகப்பிரசவமாகவும் அறுவைசிகிச்சை மூலமாகவும் மகப்பேறு வைத்தியம் பார்த்திருக்கிறோம்.
தினமும் வருகிற புறநோயாளிகளின் எண்ணிக்கை இதுவரை எண்பதாயிரத்தை தாண்டி விட்டது. இங்கு அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன், எக்ஸ்ரே மற்றும் இ.சி.ஜி., உள்ளிட்ட மகப்பேறுக்கு தேவையான அனைத்தையும் ஒரே இடத்தில் அமைத்துள்ளோம். இம்மருத்துவமனைக்கு என்றுஇதுவரை விளம்பரம் கூட செய்தது கிடையாது. எல்லாம் மக்களின் பூரண நிம்மதியே எங்களுக்கு விளம்பரமாக அமைந்து வருகிறது. ஆந்திராவிலிருந்து கூட இங்கு சிகிச்சைக்காக வருகின்றனர். வண்ணாரப்பேட்டை கட்பீஸ் ஜவுளி வியாபாரிகள் சங்கத்தின் சார்பில் இயங்கும் இம்மருத்துமனையில் பெறப்படும் குறைந்த கட்டணங்கள் கூட மருத்துவர்களின் சம்பளத் தேவைக்காக மட்டுமே வாங்கப்படுகிறது. சிகிச்சையை பொறுத்தமட்டில் மக்களுக்கு இலவசம் என்றே சொல்லலாம். தமிழகத்திலேயே ஜவுளி வியாபாரிகள் சங்கத்தின் சார்பில் மருத்துவமனை நடத்தப்படுவது இங்கு தான் உள்ளது என்பதில் நாங்கள் பெருமைப்படுகிறோம்.

- நன்றி தினமலர் .

இந்த மாதிரி யான  நல்ல விஷயங்களை நாம் ஊக்குவிப்போம் !

Sunday, December 25, 2011

தமிநாடு காவல் துறைக்கு ஒரு சல்யூட் !

தமிநாடு காவல் துறைக்கு ஒரு சல்யூட் !

எனக்கு போன வியாழக்கிழம (22 dec 2011 )காலையில ஒரு 11 : 50 க்கு ஒரு தொலைபேசி அழைப்பு " வேலாயுதம் சார் தான் பேசறீங்களா ?" 

நான் "ஆமாங்க என்னங்க வேணும் ?"

சார் நான் தி.நகர் D . C அலுவலத்திலிருந்து பேசறேன், நீங்க ஒங்க செல்போனே காணோம்னு மெயில் பண்ணீங்களா ?

ஆமாங்க ...

அந்த மொபைல் கெடசுடுச்சி..நீங்க வந்து வாங்கிக்கிறீங்களா ? எப்ப வருவீங்க ? ரொம்ப தூரத்தில இருக்கீங்களா சார் ?

ர்லதி.நக எங்க சார் ஆபீஸ் இருக்கு எதாவது லேன்ட் மார்க் சொல்லுங்க சார்.

தி.நகர் பஸ் ஸ்டாண்டு பக்கத்துல இருக்கு சார் .

ஓகே நான் இப்போ வர்றேங்க . நன்றி !

சரி இப்போ ஒரு சின்ன ப்ளாஷ் பேக்...

கடந்த ஆகஸ்டு மாதம் 13 ம தேதி நான் என் குடும்பத்தோட காளாஸ்திரி போலாம்னு கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு ஆட்டோவில் சென்றோம் .
அங்கே பேருந்து வர தாமதமாகியதால் அங்கும் இங்கும் ஓடி விளையடிக்கொண்டிருந்த என் பையனை தூக்கி வைத்துகொண்டு அங்கிருந்த இரும்பு இருக்கையில் அமர்ந்தேன். என் பையன் என் மீது ஏறி விளையாடியதில் என் பேண்டு பாக்கெட்டில் இருந்த செல் போன் கீழே விழுந்து விட்டது . அந்த சமயம் பேருந்து வந்து விட குழந்தைகளை அழைத்துக்கொண்டு பையெல்லாம் எடுத்துகொண்டு (என்னடா அப்பா பொண்டாட்டி என்ன செய்தாள் என்று கேட்பது புரிகிறது. அவள்தான் சுமார் இரண்டு கிலோ எடையுள்ள  பையை மாட்டிகொண்டு வருகிறாளே! இன்னும் புரியவில்லை என்றால் திருமணமான ஆண்களை கேட்டு தெரிந்து கொள்ளுங்கள் ) பேருந்தில் இடம் பிடித்து பேண்டு பாக்கெட்டில் கைய விட்டா பாக்கெட்டுல துணி இருக்கு ஆனா என் மொபைல் போன காணோம், எனக்கு பயங்கர அதிர்ச்சி ஏன்னா அதில ஏகப்பட்ட என்னோட சொந்த விஷயங்களை சேமித்து வைத்திருந்தேன் (அது எவ்ளோ தப்பு ன்னு இப்போ நல்லா தெரிஞ்சுகிட்டேன் ) நான் ஒடனே பக்கத்துல இருந்தவரிடம் மொபைல் வாங்கி என் நம்பருக்கு போன் அடித்தால் எடுத்த புண்ணியவான் ஒடனே சுவிட்ச் ஆப் பண்ணிட்டான் போல பல முறை முயற்சி பண்ணியும் முடியல என்ன பன்றதுன்னு தெரியாம வேற ஒருத்தருகிட்ட போன் வாங்கி ஏர்டெல் கஸ்டமர் கேருக்கு போன் பண்ணி என் நம்பர பிளாக் பண்ணிட்டேன் .எனக்கு மூடு போய்ட்டுது , ஆச ஆசையாய் செஞ்சுட்டு போன புளிசாததோட வீட்டுக்கு திரும்பிட்டோம் , இதில எம் போட்டட்டிக்கு வருத்தம் நெறயவே இருக்கும் ஏன்னா நாங்கள் கல்யாணம் பண்ணி ஒன்பது வருஷமா கேக்குறா ... நான்தான் இதோ அதோ ன்னு இழுத்துகிட்டே வந்துட்டேன் ( இன்னமும் போகலங்கிறது வேற விஷயம் ) இருந்தாலும் எனக்காக எல்லோருமா வீட்டுக்கு இன்னொரு ஆட்டோ புடிச்சிகிட்டு வீடு வந்துட்டோம். இது எல்லாம் காலையில வீட்டுல இருந்து கெளம்பன ஆறு மணியில இருந்து மறுபடியும் வீட்டுக்கு வந்த எட்டு மணிக்குள்ள முடிஞ்சு போச்சு .

அப்புறம் அவசர அவசரமா கோடம்பாக்க பூர்விகா வந்தா அவங்க இன்னும் கடையே அப்பத்தான் தொறந்தாங்க. சரி புதுசா ஒரு மொபைல கிரெடிட் கார்டுல தேச்சி வாங்கிட்டு பக்கத்துலையே ஏர்டெல் ஷாப் ல ஒரு டூப்ளிகேட் சிம் கர்ட வாங்கி வந்துட்டு டென்ஷன் ல என்ன பன்றதுன்னு தெரியாம குடும்பத்தோட வளசரவாக்கம் பாண்டியன் ஹோட்டல் ல அசைவ சாப்பாடு சாப்பிட்டோம் ( பொண்டாட்டி புள்ளகளுக்கு திரும்பி வந்த சோகம் தெரியாமலிருக்க )

அடுத்த நாள் காலையிலேயே  போலிஸ் ஸ்டேஷன் ல பிராது கொடுக்காம்னு கே .கே. நகர் போலீஸ் ஸ்டேஷன் க்கு போனேன் அவங்க "நீங்க  கோயம்பேட்டுலதானே தொலச்சிங்க அதனால கோயம்பேடு போலீஸ் ஸ்டேஷனுக்கு போங்க ன்னு சொல்ல நான் நேரா கோயம்பேடு போலீஸ் ஸ்டேஷன் பொய் எல்லாவற்றையும் எழுதி தொலைந்துபோன மொபைல் பற்றின டீடைல்ஸ் (என்னிடம் மொபைலோட IMRI நம்பர் இருந்தது நல்லதா போச்சு )ஒரு பிராது கொடுத்துட்டு வந்தேன் .

அத்தோட விடாம இன்டெர் நெட்ல தேடி ஒரு மெயில் ஐடி கண்டு பிடிச்சேன் அந்த ஐடிக்கு எல்லா விபரமும் டைப் பண்ணி அதாவது என்னோட மொபைல் வாங்கின தேதி, மொபைல் மாடல்,  என்ன கம்பனி, மொபைலோட IMRI நம்பர், கடைசியா யாருகிட்ட பேசினது அல்லது sms அனுப்பனது ன்னு எல்லா விபரமும் டைப் பண்ணி அனுப்பனேன் . இந்த மெயில் தான் எனக்கு என் மொபைல் போன கண்டு பிடுத்து தந்தது.

இதெல்லாம் முடிந்து நாலு மாதம் ஆயிட்டுது நானும் கொஞ்ச கொஞ்சமா மறந்து கிட்டு இருந்தேன் . இந்த சாதாரண மொபைல் போன போயி கண்டு பிடித்து தருவாங்களான்னு நெனைச்சு விட்டுட்டேன் . அப்புறம் ஏன்டா கம்ளைண்டு இவ்ளோ எல்லாம் பண்ணேன்னு கேகுறீங்களா எல்லாம் ஒரு அவாதான் . ஒழச்ச காசுல வாங்கினது கேடச்சுடும்னு ஒரு நம்பிக்க ....

அப்புறம் என்னடான்னா திடீர்னு மேலே சொன்னது போல போன் கால், மொதல்ல என்னால நம்ப முடியல அதே சமயம் உள்ளூர ஒரு சந்தோசம் ....
ஒடனே ஆபிஸ்ல நண்பர்கள்ட்ட சொல்லிட்டு போலீஸ் ஸ்டேஷன் க்கு கேளம்ம்பிட்டேன்.

கரைக்டா போயிட்டேன் கீழ ஒரு பெண் போலீஸ் இருந்தாங்க அவங்க கிட்ட விபரத்த சொல்லு அங்கிருந்த நோட் புக்குல என்னோட பேரு அட்ரெஸ், யார பாக்கபோறேன் இந்த விபரங்களை எழுதிட்டு முதல் மாடிக்கு போனேன் இங்கிருந்த அறையில் முன்னாடி ஒரு கம்யூட்டரில் அமர்து இருந்தவரிடம்  (அவர் பேரு திரு . புருஷோத்தமன் , கான்ஸ்டபில்) கேட்டேன் , அவர் நீங்க வேலாயுதமா ன்னு கேட்டு அங்கிருந்த ஒரு பெஞ்சில் அமர சொன்னார் .

பிறகு வேறு ஒருவரை அழைத்தார் , அவர் சுமார் சப் -இன்ஸ்பெக்டர் திரு. சிவக்குமார் , சுமார் முப்பத்தைந்து லிருந்து நாற்பது வயதுக்குள் இருக்கும் இளைஞர், எல்லோரும் மப்டியில் தான் இருந்தார்கள் . அவர் வந்து அவர் சேரில் அமர்த்து ரொம்ப பொறுமையாக, நாகரிகமாக , அழகாக, ரொம்ப நட்புடன் விசாரித்தார், எப்படிங்க தொலைச்சிங்க ன்னு அக்கறையோட விசாரித்தார், நான் எல்லாவற்றையும் சொன்ன வுடன் எனக்காக வருத்தபட்டார் . இதெல்லாம் எனக்கு பெராச்சரியமாக இருந்தது . ஏன் என்றால் சாதரணமாக போலிஸ் என்றாலே வேறு ஒரு எண்ணம் நம் எல்லோர் மனதிலும் இருக்கும் , அதையெல்லாம் தவிடுபொடியாக்கி ஒரு போதுசனத்திடம் இவ்வளவு பொறுமையாக ஒரு சப் - இன்ஸ்பெக்டர் விசாரிக்கிறார் என்றால் இருக்காதா பின்னே ,

பின்பு அந்த செல் போனை கண்கொண்டு பிடித்த விபரங்களை சொன்னார், அதை கண்கொண்டு பிடிக்க அவர்கள் எங்கெல்லாம் போனார்கள் எப்படி தேடினார்கள் , சொல்லும்போது என்னடா சாதாரண இந்த போனுக்காக இவ்ளோ அலைஞ்சி இருக்காங்களே ன்னு ஒரு பக்கம் வருத்தமாக இருந்தாலும் நம்ம போன் கெடைச்ச சந்தோசம் ....இதை தான் அவரும் சொன்னார் ... சார் உங்க போன் நாங்க கண்டுபிடிக்க ஆன மதிப்பு கூட இல்லாம இருக்கலாம் ஆனா அத ஒங்ககிட்ட கொடுத்த ஒடனே நீங்க அடியிற சந்தோசம்   அதான் சார் எங்களுக்கு சந்தோசம் மனு சொன்னாரு. தயவு செய்து முக்கியமான தகவல்களை போனில் வைக்க வேண்டாம் என்றும் வேண்டுகோள் வைத்து" டீ" சாப்டுறீங்களா ன்னு அன்பா கேட்டு அனுப்பியது என்னால் மறக்க முடியாது .

இந்த மாதிரியான நல்ல கடமை தவறாத மக்களுக்கு சேவை செய்ய காத்திருகுக்கும் சப் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் போன்ற நல்லவர்களை ஊக்குவிப்போம் .

கடமை தவறாத தமிநாடு காவல் துறைக்கு ஒரு சல்யூட் !

நன்றி !


Monday, November 21, 2011

வில்லன் நடிகர் S.A. அசோகனை மறக்காத ரசிகர் !

 
இன்று மதியம் சாப்பாட்டை முடித்து விட்டு கொஞ்சம் வெளியே நடந்துவந்த போடு அந்த போஸ்டர் என்னை ஈர்த்தது, என்ன வென்று அருகே சென்று பார்த்தபோது மறைந்த வில்லன் நடிகர் அசோகன் அவர்களின் 29 வது நினைவு தினத்தை கூறும் விதமாக இருந்தது, எனக்கு அது ஆச்சர்யமாக இருந்தது.

S.A. அசோகன்,  இந்த பெயர் இன்றைய தலைமுறை விசிலடிச்சான் குஞ்சுகளுக்கு பரிச்சயம் இல்லாத பெயராக இருக்கலாம். ஆனால் அறுபது எழுபதுகளில் ஏறக்குறைய அனைத்து தமிழ் சினிமா ரசிகர்களுக்கும் இந்த பெயர் மறந்திருக்க முடியாது என்றே நினைக்கிறேன்.

அவர் தான் மறைந்த வில்லன், குணசித்திர, நகைச்சுவை (பிற்காலத்தில்) நடிகர் S.A. அசோகன், அந்த காலத்தில் அவருடைய வசன உச்சரிப்பு, அவரின் அந்த ஒருவிதமான வசனம் பேசும் தன்மை, அதை இன்றைக்கும் பல குரல் கலைஞர்கள் பலர் மேடைகளின் பேச கண்டிருக்கிறோம்,

அதெல்லாம் சரி இதெல்லாம் இப்போ என்னவென்று கேட்பது எனக்கும் கேட்கிறது...

இந்த மதம் நவம்பர் 19 . நடிகர் S.A. அசோகன் மறைந்த நாள்,......ஓகே இப்ப அதுக்கென்ன... அதுக்கென்னவா நமக்கு எத்தன பேருக்கு அது தெரியும் ...சரி ... தெரிஞ்சுக்கற அளவுக்கு அவர் என்ன அவ்ளோ பெரிய ஆளா... இல்லைதான் ஆனா அற்புதமான ஒரு நடிகர். எனக்கு அன்பே வா படம் பாக்குறப்ப பாதி படத்துக்கு மேலதான் வருவாரு ஆனா அவர நான் எம்.ஜி. ஆர். தம்பியா ன்னு கேட்டு இருக்கேன் அந்த அளவுக்கு ரெண்டு பேருக்கும் கொஞ்சம் உருவ ஒற்றுமை யா பாக்கலாம் .

அவருக்கு நவம்பர் 19 - தோடு 29 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதை அவருடைய ரசிகர் ஒருவர் சென்னையில் இன்றும் நினைவில் வைத்து எஸ். நீலகண்டன் என்பவர் போஸ்டர் எல்லாம் அடித்து ஒட்டி நினைவு தினத்தை அனுசரிக்கிறார், இது மறைந்த வில்லன், குணசித்திர நடிகர் அசோகனின் குடும்பத்தாருக்கு தெரியுமா என்று கூட தெரியாது.


நடிகர் S.A. அசோகன் 1961 ல் வெளியான கப்பலோட்டிய தமிழன் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரைப்பட உலகுக்கு அறிமுகமானார்.  திருச்சியை சொந்த ஊராக கொண்ட அவர், திருச்சி ஜோசெப் கல்லூரியில் தனது பட்ட படிப்பை முடித்து சிறு சிறு நாடங்களின் நடித்துக்கொண்டிருந்த பொது அவருடைய நண்பர்களான பாலாஜி மற்றும் ஜெமினி கணேசன் மூலம் திரைப்படத்துறைக்கு நுழைந்தார். அவ்வையார் திரைப்படத்தில் ஒரு சிறு வேடத்தில் கூட நடித்திருக்கிறார்.

ஆரம்ப காலங்களில் MGR, A. V. M. சரவணன், ஜெய்சங்கர், திருலோகச்சந்தர் மற்றும் அவருடைய குடும்பத்தாருடன் மிகவும் நெருக்கமாக இருந்துள்ளார்.

பிற்பாடு அவருடைய சொந்த பெயரான "அந்தோணி" ஐ இயக்குனர் T .R .  ராமண்ணா தான் அவருடைய மணப்பந்தல் என்ற திரைப்படத்தில் "அசோகன்" என்று பெயரை மாற்றினார்.

இவர் ஒரு  கோயம்புத்தூரை சேர்ந்த சரஸ்வதி என்ற  பிராமண பெண்ணை காதலித்து கல்யாணமும் செய்ய விரும்பினார் ஆனால் பெண் வீட்டில்  பக்கத்த எதிர்ப்பு. என்ன செய்யறது பெண்ணை தூக்கிக்கொண்டு வந்துவிட்டார். சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள கிருத்துவ தேவாலயத்தில் சரஸ்வதி என்ற பெயரை மேரிஞானம் என்று மாற்றி எம்.ஜி. ஆர், திருலோகச்சந்தர், மற்றும் சரவணன் உதவியோடு திருமணம் செய்துகொண்டார்.

இவர் இரவும் பகலும் என்ற திரைப்படத்தில் "இறந்தவனை சுமந்தவனும் இறந்திட்டான்" என்ற பாடலை தனது சொந்த குரலில் பாடயுள்ளார். மேலும் இது சத்யம், தெய்வ திருமகள், காட்டு ராணி,  கார்த்திகை தீபம், வல்லவனுக்கு வல்லவன் போன்ற திரைப்படங்களில் கதாநாயகனாகவும் நடித்துள்ளார். அதன் பிறகு வில்லன் பாத்திரத்திலும், நகைச்சுவை கலந்த வில்லன் பாத்திரத்திலும் நடித்தார். எம்.ஜி. ஆர். உடன் ஏறக்குறைய 80 படங்களுக்கு மேல் நடித்துள்ளார்.



கடையாக 19-11-1982 அன்று இரண்டாவது முறையாக ஏற்பட்ட இதய பாதிப்பால் தனது 52  வது வயதிலேயே இவ்வுலகை விட்டு பிருந்து சென்றார். அவர் மறைந்து 29 ஆண்டுகள் ஆனாலும் அவரை மறக்காத, அவரின் நடிப்பை பார்த்து இன்னமும் மறக்காத நமது நீலகண்டன் போன்ற ரசிகர்கள் இருக்கும் வரை அசோகன் என்ற நடிகர் நம்மை விட்டு போகமாட்டார் என்பது அப்பட்டமான உண்மை.

வாழ்க அண்ணாரின் புகழ் !

நன்றி !

(எதோ எனக்கு தெரிந்த தகவல்கள் அடிப்படையில் கொஞ்சம் எழுதி உள்ளேன் மேலும் தகவல்கள் தெரிந்தவர்கள் இன்னமும் எழுதினால் மகிழ்ச்சியே !)

- யாகார்.

தமிழில் வாக்கியம் அமைக்க